சென்னை:
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தது.
மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தேர்வை 35,000 முதல் 40,000 பேர் வரை தேர்வு எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில்தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை அரசினர் மதரசா-ஐ-ஆஜம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் இந்த தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுதுவோர் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 40 நாட்களில் வெளியிடப்படும். அதாவது அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. மெயின் தேர்வு 5 நாட்கள் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.