புதுடெல்லி,
2019-2020-ம் கல்வி ஆண்டு, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 18-ந்தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன்பின்னரும் மாநிலங்களில் நிறைய இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும், மாணவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றி பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மருத்துவ கவுன்சிலின் நிர்வாகிகள் குழு இதை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மே 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் பொது அறிவிப்பு வெளியிட்டது. மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படிப்பு மற்றும் கல்லூரியில் இருந்து விலக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.