புதுடெல்லி,
பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை தங்கள் பிரசாரத்திற்கும் பயன்படுத்தின.
இந்நிலையில் நேற்று டைம்ஸ் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து புதிதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
‘கடந்த 50 ஆண்டு காலத்தில் இந்தியாவின் எந்த ஒரு பிரதமரும் சாதிக்காத வகையில் இந்தியாவை மோடி ஒருங்கிணைத்துள்ளார்’ என்ற தலைப்பிலான அக்கட்டுரையை மனோஜ் லத்வா என்பவர் எழுதியுள்ளார்.
60 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வாக்களித்த வரலாற்றின் மிகப்பெரும் தேர்தல் திருவிழாவில் பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சிக்கு பெருவாரியான வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த தேர்தல் சம்பிரதாய தேர்தலாக இருக்கவில்லை, எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தன்னாலான யுக்திகளை கையாண்டார். மோசமான பிரசார பாணி இந்த தேர்தலில் கையாளப்பட்டது.
மோசமான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் மோடியின் கொள்கைகள், திட்டங்களும் நீண்ட நெடிய நாட்களாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சுமார் 50 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதமரும் இந்த வகையிலான பெரும்பான்மையுடன் தேர்தெடுக்கப்படவில்லை. பாஜக கூட்டணிக்கு 50 சதவீதத்துக்கு சற்று குறைவான அளவுக்கு பெருவாரியான வாக்குகள் கிடைத்துள்ளது.
பிளவுவாதி என்று வர்ணிக்கப்பட்ட ஒருவர் எப்படி மீண்டும் அரியணையை பிடித்தார்? அவருடைய ஆதரவு வட்டாரத்தை எப்படி அதிகரிக்கச் செய்தார்? அதற்கு ஒரே காரணம் தான், வர்க்கப் பிளவு என்ற மோசமான ஒன்றை மோடி சரி செய்துள்ளார்.
மிகவும் பிந்தைய சமூகவகுப்பில் பிறந்த நரேந்திர மோடி, மிகவும் உயரிய இடத்தை அடைந்துள்ளார். நேரு குடும்பத்தினர் கடந்த 72 ஆண்டுகளாக செய்யத்தவறிய வகையில் உழைக்கும் வர்க்கத்தையும், ஏழை மக்களையும் அவர் அரவணைத்துச் சென்றுள்ளார்.
அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி என்பது அவர் ஏழை மக்களுக்கு நிறைவேற்றிய நலத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. அவரின் சமூக முற்போக்கு கொள்கைகள் ஹிந்துக்களையும், பிற மத சிறுபான்மையினரையும் ஒரு சேர வறுமையின் பிடியில் இருந்து மிக வேகமாக வெளிக்கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது அக்கட்டுரை.
மேலும் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை வெகுவாக பாராட்டியுள்ளதுடன், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் கழிப்பறை, மின்சார வசதி, பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாத்திற்குள் இரு வேறு வகையிலாக பிரதமர் மோடியை இகழ்ந்தும், புகழ்ந்தும் டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.