’96’ படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? – இளையராஜா
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. இப்படத்தில் நாயகியான த்ரிஷா ஆங்காங்கே இளையராஜா இசையில் ஜானகி பாடல்களை பாடியிருப்பார். மேலும் அவர் பின்னணி பாடகி ஜானகியின் தீவிர ரசிகையும் வலம் வருவார்.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இளையராஜா ’96’ படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியது தவறு என்று கூறியுள்ளார்?.
அந்தப் பேட்டியில் இளையராஜா கூறியிருப்பவதாவது, “ ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அந்த இடத்தில் புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான்.யோதான் கி பாரத் என்ற ஒரு இந்திப்படம். இசை ஆர்.டி.பர்மன். அந்தக் கதையில் ஒரு குடும்பத்தில் 3 சகோதரர்கள் உள்ளார்கள். சிறிய வயதில் சந்தோஷமாக ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள் பிரிந்துபோய் எங்கெங்கோ சென்று கஷ்டப்படுகிறார்கள். கிளைமாக்ஸில் அதேபாடலைப் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் மூலம் குடும்பம் ஒன்றாகிறது.
20 வருடங்களுக்கு முன்பு வேறொரு இசையமைப்பாளர் பயன்படுத்திய பாடலை இசையமைப்பாளர் அந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அவர் சொந்தமாக கம்போஸ் செய்தார். 20 வருடத்துக்கு முன்பு இந்தப் பாடலைத்தான் பாடினார்கள். அதை மீண்டும் இப்போது பாடுகிறார்கள் எனவே அதை இசையென்று சொல்வதா?
இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத்தானே உள்ளது. ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80-களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்க வேண்டும். அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம்” என்று கூறியுள்ளார்.