அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே!
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான்…… நீங்கள் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன்மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவு தானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அது பின்னடைவு தான். ஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகவும் அற்புதமான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, மது ஒழிப்பு, கிராமப்புற வளர்ச்சி, கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களுடன், ஏழைகளுக்கு மாதம் ரூ.2000 நிதி உதவி, வேளாண் கடன் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட சமூகப்பாதுகாப்புத் திட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நோக்கம் கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை& சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரத்து செய்ய வைத்தது பாமக தான். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத & போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின; ஏமாற்றின.