டைம் இதழ் என்னைப் பற்றி ஏன் அப்படி கட்டுரை வெளியிட்டது தெரியுமா? மோடி பதில் இதுதான்
டெல்லி:
அமெரிக்காவின் ‘டைம்’ இதழில் பிளவுவாதிகளின், தலைவர் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல செய்தி இதழ், ‘டைம்’. இதன் சமீபத்திய பிரசுரத்தின், அட்டைப்படத்தில், நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றதுடன், பிளவுவாதிகளின் தலைவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னாட்சி அமைப்புகள் மோடி ஆட்சி காலத்தில் சீர்குலைக்கபட்டதாகவும், சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழ்வதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுரை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம், நேற்று, அவரது செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், டைம் இதழ் வெளி நாட்டைச் சேர்ந்தது. அதை கட்டுரையை எழுதிய எழுத்தாளரும் கூட பாகிஸ்தானின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுவே அந்த கட்டுரையின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பதற்கு போதுமான ஒரு சான்றாகும், என்று மோடி பதிலளித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்த கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறு மாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.
மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங் ஆகியோரின் மகன் தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.