நம்ம சென்னை டி.நகரில் ஹபிபுல்லா சாலை வழியா போறச்சே யார் அவர்? என்று நம்மில் எத்தினி பேர் யோசித்திருப்போம்..
இதுவரை நினைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை.. இன்னிக்க்கு அவர் நினைவு நாளை முன்னிட்டாவது மனசாலே ஒரு ஹாய் சொல்லுங்க
நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா
அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர்.
சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்.
ஹபிபுல்லா சென்னையில் அன்சுக் உசைன் கான் சாகிப் என்பவரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர் ஆற்காடு நவாப்பின் நெருங்கிய உறவினர்கள்.
சைதாப்பேட்டையிலுள்ள சிலா உயர்நிலைப் பள்ளியில் படித்து பின்பு சட்டக் கல்வியும் கற்றார். ஜூலை 1888 இல் வேலூரில் சட்டத் தொழில் செய்யத் தொடங்கினார்.
கூடவே உள்ளாட்சி வாரிய அரசியலில் ஈடுபட்ட ஹபிபுல்லா 1895 இல் வேலூர் நகராட்சியின் அரசு சாரா மதிப்புறு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 1901 இல் நகராட்சியின் அரசு சார் செயலாளராகத் தேந்தெடுக்கப்பட்டபின் தன் சட்டத் தொழிலைத் துறந்தார். 1905 இல் நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த பதினான்கு ஆண்டுகள் அப்பதவியில் தொடர்ந்தார். ஜூலை 1919 – ஜனவரி 1920 காலகட்டத்தில் விடுப்பில் சென்றிருந்த பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரிக்கு பதிலாக சென்னை மாகாண ஆளுனரின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
1919ல் உலக நாடுகள் சங்கத்தின் முதல் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகக் கலந்து கொண்டார். 1920-24 காலகட்டத்தில் சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழுவில் வருவாய்த் துறை உறுப்பினராகப் பணியாற்றினார். 1925-30 காலகட்டத்தில் இந்திய அரசபிரதிநிதியின் (வைஸ்ராய்) நிருவாகக் குழுவில் கல்வித் துறை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1926-27 இல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியத் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
மேலும் ஹபிபுல்லா மார்ச் 15, 1934 அன்று திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவால் நியமிக்கப்பட்டார். அடுத்த இரு ஆண்டுகளுக்கு அப்பதவியை வகித்தார். தனது பதவி காலத்தில் சமஸ்தானத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாராம்