திருப்பதி: மழை வேண்டி திருப்பதி மலையில் இன்று துவங்கி ஐந்து நாட்கள் வரை காரீரி இஸ்ட்டி யாகம்,திருப்பதியில் உள்ள கபிலேஷ்வரர் கோவிலில் வருண ஜபம், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை நடைபெறுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரபல வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் நடத்துகின்றனர்.
நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று துவங்கி 18 ம் தேதி வரை ஐந்து நாட்கள் திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் மழையை வரவழைக்க நடத்தப்படும் காரீரி இஸ்ட்டி யாகம் என்ற பெயரிலான யாகத்தையும்,திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சாமி கோவிலில் வருணஜபத்தையும்,ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்துகிறது.
இந்த நிலையில் இன்று காலை திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகம் துவங்கியது.தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்,இனை நிர்வாக அதிகாரி லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதி சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்ட நிலையில் உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை,கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நிர்வகித்தனர்.
அதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வரசுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம்,வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து நாடு செழிப்படைந்தது.
இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும்,நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.
இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டி யாகம்,வருணஜபம்,அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும்.